கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்த நிலையில், சுருளி அருவியில் குளிப்பதற்கான தடையை வனத்துறையினர் நீக்கினர்.
இதன் எதிரொலியாக தமிழ் புத்தாண்டு நாளான இன்று வியாழக்கிழமை அதிகாலை முதலே ஆண், பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமியர் சுருளி அருவியில் குளிக்க திரண்டனர்.
கோடை மழை பெய்த நிலையில் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளதால் அருவியில் போதுமான அளவு தண்ணீர் வந்தது, இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகமாக நீராடினர்.
பின்னர், இங்குள்ள அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண சுவாமி கோயில் மற்றும் வனப்பகுதியில் உள்ள கைலாசநாதர் குகை கோயில்களில் வழிபாடுகள் செய்தனர்.
பின்னர் தங்களது குல தெய்வங்களின் சாமி கும்பிட்டு திருவிழாவிற்காக, தீர்த்தத் தொட்டியில் சுருளி தீர்த்தம் எடுத்து சென்றனர்.
ஸ்ரீ ஐயப்பன் கோயில்: சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஸ்ரீ ஐயப்பன், தென்கயிலாய நாதர் சுவாமி, ஸ்ரீ பாலமுருகன் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
அர்ச்சகர் கணேஷ் திருமேனி வழிபாட்டில் கலந்துகொண்ட ஆண், பெண் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.