கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் பரவலாக இடியுடன் மழை பெய்தது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ):
கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 27.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓசூர் - 18.6, நெடுங்கல் - 12, பாரூர் - 10.2, தேன்கனிக்கோட்டை- 10, சூளகிரி -9, அஞ்செட்டி - 5.4, தளி -5, போச்சம்பள்ளி -4.2, ராயக்கோட்டை - 2, ஊத்தங்கரை - 1.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 104.7 மில்லி மீட்டரும் அதாவது சராசரியாக 8.72 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெல்லட்டி கிராமத்தில் நேற்று இரவு பயங்கர இடியுடன் மழை பெய்தபோது, அங்குள்ள தென்னை மரத்தின் மீது இடி தாக்கியதில் மரம் இரண்டாகப் பிளந்து, அதன் ஒரு பகுதி, அருகே இருந்த வீட்டின் மீது சரிந்ததில் பில்லப்பா (70) என்பவர் காயமடைந்தார். காயமடைந்த அவர் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.