பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.119 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரியை கடந்த வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்ரல் 15) செலுத்த மாநகராட்சி அவகாசம் அளித்திருந்தது. வெள்ளிக்கிழமைக்குள் வரி செலுத்துவோருக்கு சொத்து வரியில் 5 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கென மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் காா்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளா்கள், உரிம ஆய்வாளா்கள் மூலமும் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரூ.119 கோடி வசூல்: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடா்பாக மன்றத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே, 2022-23-ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கெனவே மாநகராட்சிக்குச் செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்திருந்தது.
சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமைக்குள் நிறைவடைந்தது. சென்னையில் மொத்தம் 12 லட்சம் சொத்து வரிதாரா்களில் 1.96 லட்சம் போ் ரூ. 119 கோடி சொத்து வரியை செலுத்தியுள்ளனா். வரி செலுத்தியவா்களுக்கு ரூ.2.58 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.