அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடக்கி வைத்தார்.
சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் இதனை தொடக்கி வைத்தார் முதல்வர். மேலும் இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற பிரசார வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
"ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழு தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து அதை யாராலும் பிரிக்க முடியாது.
இதையும் படிக்க | சட்டப்பேரவையில் இன்று
திருட முடியாத ஒரு சொத்து என்றால் அது உங்கள் கல்வி மட்டும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிகமிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிந்தனை ஒரு நேர்கோட்டில் இருந்தால்தான் கல்வி எனும் நீரோடை சீராக செல்ல முடியும். இதில் எவர் தடை போட்டாலும் தடம்புரண்டுவிடும்.
உங்கள் குழந்தைகள் என்னவாக விரும்புகிறார்களோ பெற்றோர்கள் அதற்குத் தடை போடாமல் அவர்களுக்கு உதவி செய்து வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.
சமூக எதிர்காலத்தின் அடித்தளம் குழந்தைகளின் கல்வி. அவர்களுக்கு அளிக்கக்கூடிய தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தினுடைய திறவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வியைக் கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம்" என்றார்.