ஆளுநருக்கு கருப்புக் கொடி: பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை வீசினர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“ஆளுநரின் வாகனம் வரும் வழியிலேயே போராட்டத்திற்கு அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடத்தியவர்களை முன்னதாகவே அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி” என்றார்.