தமிழ்நாட்டில் மின் தடை இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தடையில்லா மின்சாரம் கொடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72,000 டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32,000 டன் மட்டுமே நிலக்கரி அளித்தது. மின்பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது. இதுவும் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்.
தமிழ்நாட்டில் போதுமான நிலக்கரி இல்லாதபோதும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.