அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த உயர்நிலைக் குழு

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து பணியமர்த்த உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த உயர்நிலைக் குழு

சென்னை: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து பணியமர்த்த உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதல்வர் சார்பில் பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு மறுவாழ்வு இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் என 24 கட்டடங்களுக்கு, மேற்கூûரை சரிசெய்தல், கணினி ஆய்வகம் அமைத்தல், கழிப்பறை அமைத்தல், இல்லவாசிகளின் விடுதிகள் அலுலவக கட்டட பராமரிப்பு போன்றவற்றுக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தென்மாவட்டங்களில் உள்ள செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய இளநிலை பட்டப் படிப்பினை பயில்வதற்கு உயர் கல்வித்துறையின் இசைவுடன் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் சேவையைப் பெறுவதற்காக  ரூ.1.51 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சுயதொழில் உதவித் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் ரூ.25 ஆயிரம் தொகையினை அறிவார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து 400 பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது உள்ள வயது உச்சவரம்பினை 45}இல் இருந்து 60}ஆக நீட்டித்து ரூ.1.48 கோடி செலவில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 2,100}க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் கட்டமாக திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் வகையில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.900}இலிருந்து ரூ.1,200}ஆக உயர்த்தி ரூ.3.92 கோடி கூடுதல் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான நடுநிலைப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாகவும், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள இரண்டு செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் ரூ.1.15 கோடி செலவில் 128 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்தப்படும்.   
அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தகுதியான பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்துறை ஆகிய துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து ஆவின் பாலகம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தும் பொழுதும்,  முக்கிய நிகழ்வுகளின் பொழுதும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016}இல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி  4 சதவீதம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில்  வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசுத் துறைகளில் ஏ, பி தொகுதிகளில் 559 பதவியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பதவியிடங்களாக கண்டறியப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
அரசு பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், குழுமங்கள், அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் ஏ, பி தொகுதிகளில் உள்ள பதவியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பதவியிடங்களைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சி, டி தொகுதி பதவியிடங்களைப் பொருத்தவரையில் அனைத்துப் பதவியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பதவியிடங்களாக கண்டறியப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அரசின் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மனித வள மேலாண்மை துறை ஆகிய துறைகளின் அரசு செயலாளர்களைக் கொண்டு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த வேலை வாய்ப்பினைக் கண்டறிய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு அமைத்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டு மனைபட்டா வழங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com