பாதுகாப்புப் பணியின்போது தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்க்கெட் தெரசாவுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் செல்வி. மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- ஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த, முதல்வர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் செல்வி. மார்க்ரெட் தெரசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல், செல்வி. மார்க்ரெட் தெரசாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.