மாநிலங்களின் உரிமையை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு பறிக்காது:  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பி
மாநிலங்களின் உரிமையை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு பறிக்காது:  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்


மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ முழுவீச்சில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு அதன் சார்பாக பல முனைப்புகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) என்ற தேசிய அளவிலான ஒரு தேர்வை நடப்பு ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்த போவதாகச் சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. 

இது மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்காக என்று கூறப்பட்டாலும், வருங்காலத்தில் இத்தேர்வு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு, மொழி, பாடப்பிரிவு - பொதுத்திறன் - தகுதி என மூன்று பிரிவுகளைக் கொண்டது எனவும், மூன்றாவது பிரிவு விருப்பப் பிரிவாக உள்ளதால் அது கட்டாயமில்லை எனவும் கூறப்படுகிறது. 

இத்தேர்வின் உள்ளடக்கங்கள் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் பல்வேறு மதிப்பீடுகள் மூலம் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து தேசிய அளவிலான மாணவர் சேர்க்கையில் நியாயமான தர அளவீடு செய்ய முடியாது என்பதால் இத்தேர்வு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு நிபுணர்களுடன் விரிவான மற்றும் அதிக பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள். அதன்படி, 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 1968 மற்றும் தேசியக் கல்விக் கொள்கை 1986, 1992 ஆகியவை கல்வித்துறையில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் ஆவணங்களாக உள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020 முந்தைய கல்விக் கொள்கைகளின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படலாம்."

பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் அதனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தேர்வு மையங்களில் இருந்து தேர்வு மையத்தை தேர்வு செய்து 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பொது நுழைவுத்தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாறாக, இந்த நுழைவுத்தேர்வு(கியூட்) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமையை பாதிக்காது.

ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும், இதனால், ஏழை எளிய மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும். குறிப்பாக, கோச்சிங் சென்று பயிற்சி பெரும் முறையை ஒழிக்கும் நோக்கத்திற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது” என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகளை அறிமுகப்படுத்துவதால், மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தனியார் பயிற்சிக் கூடங்கள் பெருகிவிடும். அவற்றில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படும். வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயிற்சிக் கூடங்களில் கட்டணம் செலுத்தி பயில முடியும். கிராமப்புற மாணவர்கள் பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து பயில இயலாததால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். உயர்கல்வி என்பது கிராமப்புற மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எட்டாக்கனி ஆகிவிடும் என என அனைத்து தரப்பிலும்  கேள்வி எழுந்த  நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்டவைகளை நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com