சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் இன்று 11 மணிக்கு திடீரென தீ விபத்து நேரிட்டது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நேரிட்ட நிலையில், திடீரென வெடிசப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது.
மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க.. பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்து நேரிட்ட நிலையில், திடீரென அந்த கட்டடத்துக்குள் வெடி சப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கட்டடத்துக்குள் இருந்து கரும்புகை வெளியானது. இதனால், அந்த அறைக்குள் வெடிக்கும் வகையில் எந்தவிதமான பொருள்கள் இருக்கின்றன என்று தீயணைப்புத் துறையினர் கேட்டுவருகிறார்கள்.
தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், தீ விபத்து நிகழ்ந்த அறைக்குள் எத்தனை நோயாளிகள் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.