தூத்துக்குடி: நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வியாழக்கிழமை 4 அலகுகளில் ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் காற்றாலை மூலம் போதுமான மின்சாரம் கிடைப்பதால் அந்தக் காலக்கட்டத்தில் மின் உற்பத்தியை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது அலகுகளில் மின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டுவரப்பட்டு கடந்த சில நாள்களாக சில அலகுகள் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 முதல் 5 ஆவது அலகுகள் வரை வியாழக்கிழமை ஒர் நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
1 ஆவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.