நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஐந்து வயது குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் உவரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி தங்க செல்வி, இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். விஜயன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் தங்கசெல்வி உவரி அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2-ஆவது திருமணம் செய்துள்ளார். அவர் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்க செல்விக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு, கூட்டப்பனை சுனாமி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் அவரிடமிருந்து பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர், மாரியப்பன் குழந்தையை கேரளம் மாநிலம் கோட்டயம் ஆம்பூரை சேர்ந்த செல்வகுமார்- சந்தனவின்சியா என்ற தம்பதியிடம் விற்றுள்ளார். அந்த தம்பதியினர் குழந்தையை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த குழந்தை விலைக்கு வாங்கப்பட்டது, குழந்தையின் பெற்றோர் விவரம் தெரியவந்தது.
இதையடுத்து கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் நெல்லையில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேரளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் தங்கசெல்வி, குழந்தையை வாங்கிய கேரள தம்பதி செல்வக்குமார்-சந்தனவின்சாயா மற்றும் குழந்தையை விற்பனை செய்த மாரியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தந்தை அர்ஜுனனை தேடி வருகின்றனர்.