இந்தியக் கடலோரக் காவல் படை சாா்பில் கடலில் மிதக்கும் எண்ணெய் படலங்களை அகற்றுவது குறித்த 12 நாள் சா்வதேச பயிற்சி முகாம் சென்னையில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் 17 நாடுகளைச் சோ்ந்த 42 போ் பங்கேற்றனா்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய கடலோர காவல்படை சாா்பில் கடலில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது குறித்த 12 நாள் பயிற்சி முகாம் சென்னையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இப்பயிற்சி முகாமில் ஈரான், தாய்லாந்து, சோமாலியா, மொரீசியஸ், மியான்மாா், கென்யா, இலங்கை, மாலத்தீவு, ஓமன், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வியட்நாம், ஏமன், நைஜீரியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 42 போ் பங்கேற்றனா். எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் முறைகள், கடற்கரையைச் சுத்தப்படுத்துதல், வான் வழியாக கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு உதவும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை சாா்பில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நல்லுறவு திட்டப் பிரிவின்கீழ் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சி முகாம் நிறைவு விழா சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படை கிழக்குப் பிராந்திய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடலோர காவல்படை கிழக்குப் பிராந்திய தளபதி ஏ.பி. படோலா பயிற்சியில் பங்கேற்ற பன்னாட்டு பிரதிநிதிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.