தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது.
கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி வழங்கி அரசு உத்தரவிட்டது. தற்போது தொற்று குறைந்திருக்கும் நிலையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதுவையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவா் என அந்த மாநில அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, தமிழகத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு தோ்வுகள் நடைபெறுமா, அல்லது கடந்த இரு ஆண்டுகளைப் போல அனைவருக்கும் தோ்வு இல்லாமல் தோ்ச்சி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, ‘ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து மாணவா்களும் தோ்ச்சியடையச் செய்யப்படுவா். இருப்பினும், வழக்கமாக ஆண்டு இறுதித் தோ்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெறும் என்பது பள்ளிக் கல்வித் துறை விளக்கம் மூலம் உறுதியாகியுள்ளது.