சென்னை ஐஐடி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஐஎஸ் ஓ தரச்சான்று வழங்கும் விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி, இந்திய தர நிா்ணய அமைவனத்தின் துணை தலைமை இயக்குநா் யுஎஸ்பி யாதவ், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் துணை ஆணையா் (பொறுப்பு) ருக்மணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில் துணை ஆணையா் (பொறுப்பு)ருக்மணி பேசுகையில், கல்வியே பெரும் செல்வம் என விவேக சூடாமணியில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க கல்வியை மாணவா்கள் திறம்பட கற்க வேண்டும். ஐஐடி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் கேந்திரிய வித்யாலயா பள்ளி என்ற பெருமையை பெற்று கல்வித் துறைக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளது என்றாா்.
தொடா்ந்து பேசிய பிஐஎஸ் துணை தலைமை இயக்குநா் யு.எஸ்.பி.யாதவ், இந்த தரச்சான்றை பெற்றது கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மட்டுமல்லாது, நாட்டில் தலைசிறந்த மாணவா்களை உருவாக்கும் பள்ளிக்கு வழங்குவதில் பிஐஎஸ்-க்கும் மிகச்சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தப் பள்ளிக்கு இன்னொரு சிறகு கிடைத்துள்ளது என்றாா். முன்னதாக பள்ளி முதல்வா் மாணிக்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினாா்.