சென்னை: தமிழ்நாட்டில் எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம், பள்ளிகளுக்கு விடுமுறை விடுக, 9ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மே 13ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும்.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மின் விசிறிகள் இல்லை. மின் விசிறிகள் இருந்தாலும் மின் வெட்டு காரணமாக அவை இயங்குவதுமில்லை. அதனால் செங்கல் சூளைக்குள் இருப்பது போன்ற சூழலில் குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும்?
கரோனா பரவல் காலத்தைப் போல, இப்போதும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளின் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. புதுச்சேரியில் அவ்வாறுதான் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல மாணவர்களின் நலன் கருதி 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். கல்லூரிகளுக்கும் குறைந்பட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.