நீதிமன்றங்களில் காணொலி முறையில் விசாரணை நடத்துவதை மனுதாரரின் அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மனுக்களை ஒரு தன்னாா்வ அமைப்பும், ஜூலியோ ரிபெய்ரோ, சைலேஷ் ஆா்.காந்தி போன்ற பிரபலங்களும் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா, ‘நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ‘நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிடவில்லை. அனைவரும் நீதிமன்றத்துக்கு வருகிறாா்கள். நிலைமை மோசமானால் அதுகுறித்து பரிசீலிப்போம்.
சிறையில் இருப்பவா்களை விடுவிப்பது, ஜாமீன் வழங்குவது போன்ற இதைவிட முக்கியமான பல அவசர வழக்குகள் உள்ளன. எனவே, இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது’ என்று கூறினா்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘காணொலி முறையில் விசாரணைகள் நடத்துவதற்கு முயற்சி செய்தோம். ஆனால், அந்த நடைமுறை பலனளிக்கவில்லை. இயல்புநிலை மீண்டு வருகிறது. நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறும்’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.