மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 80,000 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் புதன்கிழமை இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து வினாடிக்கு 1,75,000 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,75,000 கன அடி வரை வெள்ளநீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளது. காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,50,000 கன அடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000கன அடி நீரும் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,27,000கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.