சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘கியூ ஆர் கோட்’ மூலம் பயணச்சீட்டு வாங்கினால் 20 சதவிகிதம் தள்ளுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இனி வரிசைகள் இல்லை, கியூஆர் மட்டுமே’ என்ற திட்டத்தை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிலைங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ, இணைய வங்கி, கடன் மற்றும் சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலமும் பயணச்சீட்டு கட்டணத்தை செலுத்தலாம்.
மொபைலில் உள்ள யுபிஐ செயலியில் ‘க்யூஆர் கோடை’ ஸ்கேன் செய்தால், பயணச்சீட்டு பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். அதில், நீங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தேர்வு செய்து பணத்தை செலுத்தினால், க்யூஆர் பயணச்சீட்டுகள் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்படும்.
இந்த முறையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்ப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தை சென்னை மெட்ரோ மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் இன்று காலை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.