12 ஆண்டுகளாக பணிமேம்பாடு பெற முடியாமல் தவிக்கும் கல்லூரி பேராசிரியர்கள்! ஆராய்ச்சி மாணவர்களும் பாதிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பணி மேம்பாடு வழங்கப்படாத நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரிகளின் தர மதிப்பீடும்
12 ஆண்டுகளாக பணிமேம்பாடு பெற முடியாமல் தவிக்கும் கல்லூரி பேராசிரியர்கள்! ஆராய்ச்சி மாணவர்களும் பாதிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பணி மேம்பாடு வழங்கப்படாத நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரிகளின் தர மதிப்பீடும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 162 அரசு கலைக் கல்லூரிகள், சுமார் 200 அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர்களாக (பேராசிரியர்கள்) பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 7 ஆண்டுகள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் சுமார் 2500 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2008 இல் 500 பேர், 2009 இல் 1000 பேர், 2011 இல் 900-க்கும் மேற்பட்டோர், 2015 இல் 1000-க்கும் மேற்பட்டோர் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக பணி நியமனங்கள் நடைபெறவில்லை.
உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்தடுத்த 4 ஆண்டுகளில், மூத்த உதவிப் பேராசிரியர், தேர்வு நிலை உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் என பணி மேம்பாடும் வழங்கப்பட வேண்டும். ஆனால், 2006 மற்றும் 2007 இல் பணி நியமனம் பெற்றவர்கள் சுமார் 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், மூத்த உதவிப் பேராசிரியர்களாகவே தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். 2 நிலை பணி மேம்பாடு வழங்கப்படாமல் உள்ளது.
இப்போது சூழலில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பணி மேம்பாடு கிடைக்காமல் பாதிப்படைந்துள்ளனர்.
அரசாணை வெளியிடவில்லை:
பிஹெச்டி ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தும் தேர்வாளர் இணைப் பேராசிரியராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதற்கு இணைப் பேராசிரியர் நிலையிலுள்ளவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இணைப் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஆராய்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பல்கலை. மானியக் குழு கடந்த 2018-இல் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இணைப் பேராசிரியர்களாக பணி மேம்பாடு வழங்குவதற்கு அந்தந்த மாநில உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட வேண்டும். ஆனால், தமிழக உயர் கல்வித்துறை தற்போது வரை அதற்கான அரசாணையை வெளியிடவில்லை.
கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு உதவிப் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்பது
குறிப்பிடத்தக்கது.
முனைவர் பட்டம் பெறுவதில் சிக்கல்: அரசு மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, முனைவர் பட்டம்(பிஹெச்டி), மாநில அளவிலான தகுதித் தேர்வு (எஸ்எல்இடி), தேசிய அளவிலான தகுதித் தேர்வு(என்இடி) ஆகிய தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதில், பிஹெச்டி ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், இணைப் பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உதவிப் பேராசிரியர்கள், மூத்த உதவிப் பேராசிரியர்கள் மற்றும் தேர்வு நிலைப் பேராசிரியர்கள் நிலையில் 4 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே ஆய்வு வழிகாட்டியாக செயல்பட முடியும். அதே நேரத்தில் இணைப் பேராசிரியராக இருந்தால், 6 மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியும். இதனால் பணி மேம்பாடு பிரச்னை பேராசிரியர்கள் மட்டுமின்றி ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் கூறியதாவது: தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்), மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) ஆகிய குழுக்கள் அரசுக் கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் போது ஆராய்ச்சிப் பணிகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை, பிஹெச்டி முடித்த மாணவர்களின் எண்ணிக்கை, ஆராய்ச்சித் திட்ட நிதி பயன்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
பணி மேம்பாடுகளுக்கான அரசாணை கூட 5 ஆண்டுகளாக வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பிற அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கங்களும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. இணைப் பேராசிரியர்களாக பணி மேம்பாடு அளிக்கப்பட்டால், ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மணவர்களின் தற்போதைய எண்ணிக்கை மேலும் 50 சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், அரசுக் கல்லூரிகளின் தர மதிப்பீடும் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com