சுருளி அருவிக்கு வியாழக்கிழை, நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க புலிகள் காப்பகத்தினா் 3 ஆவது நாளாக தடை நீட்டிப்பு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது, மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளிமலையில் தொடர் மழை பெய்து வருவதால் அருவியின் நீர்வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் சுருளி அருவியில் குளிக்க புலிகள் காப்பகத்தினர் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்க தடையை நீட்டித்தனர், தொடர் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரிப்பு:
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரியில் நீர் வரத்து அதிகரித்து, புதன்கிழமை அணைக்கு வினாடிக்கு, 2,253.95 கன அடி தண்ணீர் வந்த நிலையில், வியாழக்கிழமை அணைக்கு வினாடிக்கு, 2,831 கன அடி தண்ணீர் வந்தது.
அணை நிலவரம்: வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 135.15 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு, 5,903 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு, 2,831 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,866 கன அடியாகவும் இருந்தது.
மழைப் பதிவு: தேக்கடியில் 39.6 மி. மீட்டர் மழையும், பெரியாறு அணையில், 39.2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மின் உற்பத்தி: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் கடந்த ஜூலை 4 முதல் நான்கு மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட் என மொத்தம் 168 மின்சாரம் உற்பத்தி தொடங்கியது, தற்போது வரை தொடர்ந்து 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.