மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்களின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
அதில், கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அமைய உள்ளது. மேலும், நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு கருணாநிதிக்கு பேனா வடிவில் ரூ.80 கோடியில் நினைவுச் சின்னம் வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு அரசியல் கட்சியினரிடையே பல எதிர் கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்தவித தவறும் இல்லை.
மேலும், கருணாநிதி பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்களின் மரபணுவை(டிஎன்ஏ) பரிசோதிக்க வேண்டும் என்று அழகிரி கூறியுள்ளார்.