அதிமுக தலைமை அலுவலக வழக்கில் ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சாவியுடம் இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவிடக் கூடாது என்று கூறி இபிஎஸ் தரப்பு கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிய நிலையில் வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.