சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை: கோரிக்கை வைத்த மு.க. ஸ்டாலின்

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை: கோரிக்கை வைத்த மு.க. ஸ்டாலின்
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை: கோரிக்கை வைத்த மு.க. ஸ்டாலின்


சென்னை: சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன்.

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும்.6

- இவை சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இக்கோரிக்கைகளை சில மாதங்கள் முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன்வைத்தவைதான். இருப்பினும் மீண்டும் அவற்றை இங்கு வலியுறுத்த, நினைவூட்ட நான் விரும்புகிறேன். இங்கு வந்து கௌரவித்துள்ள நீதிபதிகள் அவற்றை தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றித்தரவும் உங்கள் அனைவரின் சார்பில் நான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீதித்துறையைப் பொறுத்தவரை நான் இங்கே கோரிக்கை வைப்பவனாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை நீதிபதிகள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன். சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமைய முடியும்.
எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம்.

மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறிவோம். உலகப் பொருளாதார மேதையான அமர்த்தியா சென், கூறுகிறார். அவர் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ் என்ற புத்தகத்தில், நீதியை உருவாக்கிக் கொடுப்பதும் - அநீதி எற்படாமல் தடுப்பதும் - ஆகிய இரண்டும் முக்கியமானது என்கிறார்.

அத்தகைய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் செயலாற்றி வருகிறோம்.

இதைத்தான் அய்யன் வள்ளுவர் தனது குறளில்
“வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூம் கோடா தெனின்” – என்று கூறினார்.

இதன் பொருள்,
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம்.

அந்த வகையில், மாநில மனித உரிமை ஆணையமானது இத்தகைய சமூகநீதி சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com