சென்னை மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா சாலையிலுள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேரணியாக வந்து மெரினா காமராஜர் சாலையிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் திமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாத நிலையில், மாநிலம் முழுவதும் இன்று கருணாநிதி நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
அந்தவகையில், அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெற்றது. இதனையொட்டி அண்ணா சாலையிலுள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலிருந்து வாலாஜா சாலை வழியாக மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, உள்ளிட்டோருடன் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு. எ.வ.வேலு, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
அமைதிப் பேரணியையொட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன், கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு புறப்பட்டுச்சென்றார்.
அதனைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம் செல்லவுள்ளதாகவும் தெரிகிறது. இன்று நண்பகல் வரை திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.