44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நாளை (ஆக. 9) மாலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 5.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று 10வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நாளைய போட்டிகளுடன் நிறைவு விழாவும் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேரு உள்விளையாட்டரங்கில் நிறைவு விழா நடைபெறுவதையொட்டி, இன்று (ஆக.8) காலை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.