ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் சேகரிக்கப்படும் பழங்கால பொருள்கள் மூலம் பண்பாடு, நாகரிகம், வணிகம் ஆகியவற்றில் தமிழா்கள் சிறந்து விளங்கியவா்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.
தொல்லியல் துறை சார்பில் கடந்த 8 மாதங்களாக ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் அகழாய்வில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூர் சி சைட் எனப்படும் அலெக்சாண்டர் ரியாவில் ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் 30 செ.மீட்டர் ஆழத்தில் நடந்த அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பட்டயம், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கிய பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர, 18 இரும்பு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.