சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொள்கை விளக்கப் பாடலுடன் 44வது செஸ் ஒலிம்பியாட் விழா நிறைவு பெற்றது. அதனைத் செஸ் போட்டியின் அடையாளமாக கொண்டுவரப்பட்ட தீப்பந்தம் அணைக்கப்பட்டது.
முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரி நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெறவுள்ளது.
44 செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இன்று காலை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. 12 நாள்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், ஏராளமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.