பிகாரில் 7 கட்சிகளைச் சேர்ந்த 164 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.
கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக்குப் பிறகு, பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து கூட்டணி குறித்து நிதீஷ் குமார் பேசினார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு தேஜஸ்வியுடன் சென்று ஆளுநரை நேரில் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிதீஷ் குமார் பேசியதாவது, பிகாரில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 164 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கூட்டணிக் கட்சி தலைவராக நிதீஷ் தேர்வு: மீண்டும் முதல்வராகிறார்?
ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்க வந்தேன். ஆட்சி அமைப்பதற்காக 7 கட்சிகளைச் சேர்ந்த 164 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 242 ஆக உள்ளது. இதில் ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்களிடம் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.