சேலம் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
சேலத்தில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக 10 நாள்கள் கொண்டாடப்படும். இந்நிலையில் இந்தாண்டு ஆடித் திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பக்தர்கள் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் விடிய விடியப் பொங்கல் வைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலும், அம்மனுக்கு அக்னி கரகம் எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கோட்டை மாரியம்மன் வழிபட்டுச் சென்றனர்.