பெரியபாளையம் கோயில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம் வழங்கினார் ஸ்டாலின்

பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பெரியபாளையம் கோயில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம் வழங்கினார் ஸ்டாலின்
பெரியபாளையம் கோயில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம் வழங்கினார் ஸ்டாலின்


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்களை மும்பை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமிராஜூ  தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது.

இக்குழுவின் முன்னிலையில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இப்பொன் இனங்களை இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் ரிவேம்ப்டு கோல்டு டெபாசிட் ஸ்கீம், 2015 திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 இலட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25% ஆகும். 

இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி இத்திருக்கோயில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com