நாமக்கல்: நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா ஆகியோர் வீட்டின் முன்பாக காத்திருக்கின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, நாமக்கல் தொகுதியில் 2011 முதல் 2021 வரை இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்த கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். . மேலும் அவர் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டின் முன்பு காத்திருக்கும் முன்னாள் அமைச்சர்கள்.
முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் மீது ரூ.4.72 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், பாஸ்கருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, பரமத்தி வேலூர் எம்எல்ஏ எஸ். சேகர், திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ பொன். சரஸ்வதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் சோதனை நடைபெற்று வரும் பாஸ்கர் வீட்டின் முன்பாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலரும் காத்திருக்கின்றனர்.