ஈரோடு: புத்தக வாசிப்பு அவசியம் என்று, நூலகத்தில் புத்தகங்கள் வாசித்து ஐஏஎஸ் ஆகி, மகாராஷ்டிர தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வரும் பொ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தொழில்துறை முதன்மைச் செயலாளர் பொ. அன்பழகன், சொந்த ஊரான அரியப்பாளையத்தில் சுதந்திர நாள் விழா கொடியேற்று விழாவில் பங்கேற்றார். அவருக்கு கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் சுதந்திர தினவிழா கொடியேற்று நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகிக்கும் பொ. அன்பழகன் பங்கேற்றார்.
சொந்த ஊரான அரியப்பம்பாளையத்தில் அவருக்கு உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தேசிய கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், மகாராஷ்டிரத்தில் உயர்பதவியில் இருந்தாலும் சொந்த ஊரில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
சத்தியமங்கலம் அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்தேன். நூலகத்தில் தமிழ் புத்தகங்களையும் தினசரி பத்திரிகைகளையும் படித்தே வளர்ந்தேன். வாசிப்பு மிக முக்கியம். செல்லிடப்பேசி பதிவு, இன்டர்நெட் பதிவுகள் நம் மனதில் நிற்காது. தாய் மொழியில் படிப்பது அறிவை செரிவூட்டும். தமிழ் மொழியில் மட்டுமே சிந்திக்க முடியும். அறிவு செறிவூட்ட இயலும், தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளும் அவசியம். பிறருடன் தொடர்புகொள்ள பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.