மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்ததை அடுத்து மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியின் திறக்கப்பட்டது.
தொடர் மழை, கர்நாட அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் கிடுகிடுவென உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 16 ஆம் தேதி நிரம்பியது. அணை நிரம்பிய பிறகும் நீர்வரத்து தொடர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் உபரி நீர் கால்வாயான 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது.
பதினாறு கண் பாலத்தின் மதகுகள் மூடப்பட்டன
தற்போது, காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரித்து வந்தது. புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து சரிந்ததால் உபரி நீர் போக்கியில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. உபரி நீர் போக்கியான பதினாறு கண் பாலத்தின் மதகுகள் புதன்கிழமை காலை மூடப்பட்டன.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,00 0கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணை உபரிநீர் போக்கியின் மூலம் 28 நாள்களில் 184 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி முதல் புதன்கிழமை காலை வரை மேட்டூர் அணைக்கு 286 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து இதுவரை 278 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.