அதிமுக பொதுக்குழு வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதாரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார்.
மேலும் அந்நாளில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு மோதலில் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அலுவலகத்தின் சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.