நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் லட்சுமிபுரத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டடத் தொழிலாளியை அடித்து கொலை செய்த கொலையாளி கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவர் கட்டட பணிகளுக்கு கூலித் தொழிலாளியாக சென்று வருகிறார். இவருக்கு 3 மகள்களும் 1 மகனும் உள்ளார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் நட்டார் குளத்தை கணேசன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில், கணேசனிடம் ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.50,000 பணம் பெற்றதாகவும் இதற்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சிறிய அளவிலான பணம் கொடுத்து கடனை கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் ராஜா வழக்கமாக லட்சுமிபுரம் ஊர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயில் அருகே அமர்ந்து கொண்டிருந்த நிலையில் புதன்கிழமை இரவு வழக்கமாக கொடுக்கக்கூடிய பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறி கணேசன் ராஜாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும் அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம் | ஹோலகாஸ்ட்’: பாலஸ்தீன அதிபரின் கருத்தால் சா்ச்சை
இதனைத் தொடர்ந்து ராஜாவை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனை அம்மன் கோயில் அருகே அமர்ந்திருந்தது ஊர் மக்கள் கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து கணேசன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த மக்கள் ராஜாவை மீட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தவுடன் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் கொலையாளி கணேசனையும் தேடி வருகின்றனர்.