திருச்சி: பிறருக்கு வழங்கவேண்டியே விவசாயிளை வறுமைக்கு உள்ளாக்கி அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிப்பதுபோல அவமானமான செயல் வேறு எதுவுமில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி நிறுவனரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆகியோர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே நாளில் விமானம் மூலம் திருச்சி வந்தனர். அப்போது அங்கு காத்திருந்த இரு தரப்பு தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.
இதில் ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு தாக்கப்பட்டார். இது தொடர்பாக கே.கே. நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் (ஜேஎம் 6) வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அந்த வழக்கு தொடர்பாக சீமான், நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜனார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் ஒரு நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிருபிக்க முடியுமா. இப்போதே தமிழக அரசுக்கு ரு.6.30 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கு மேல் எதற்கு வெற்று பசப்பு அறிக்கைகள் வெளியிடுகின்றனர். பிறருக்கு வழங்கவேண்டிய விவசாயிகள் இந்தியாவில் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான மற்றும் அவமானமான செயல். இதில் பெருமை அடைய ஒன்றும் இல்லை.
தமிழகத்தில் நியாயவிலைக் கடையில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை எத்தனை ஆண்டுகளுக்கு கொடுக்கப் போகிறார்கள். பாஜக பெற்று வரும் இந்து வாக்குகளை கவருவதற்காக 90 சதவிகித இந்துக்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
இதையும் படிக்க: நெல்லை கண்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி சொல்கிறார். சுதந்திரக் கொடியை கையில் பிடிக்கும் தகுதி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டுக்குமே கிடையாது என்றார் அவர்.