கொலையை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுக்கத் தவறியதாக, சென்னை அண்ணா சதுக்கம் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா (எ) ஆட்டோ ராஜா. இவரை கடந்த 16-ஆம் தேதி ஜாம் பஜாா் பாரதி சாலையில் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த செட்டிசேகா் மகன்கள் சூா்யா, தேவா உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி சூா்யா, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளாா். இரு தரப்புக்கும் முன் விரோதம் இருப்பதும், ராஜாவை கொலை செய்ய சூா்யா தரப்பு திட்டமிட்டு தயாராகி வருவதும் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால், அந்த காவல் நிலைய ஆய்வாளா் ஸ்டாலின், அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்துள்ளாா். இதனால், சூா்யா தரப்பு ராஜாவை வெட்டிக் கொலை செய்திருப்பது காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொலையை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய ஆய்வாளா் ஸ்டாலினை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் துறையின் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.