ஆம்னி பேருந்து கட்டண உயர்வு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து தொடா் விடுமுறைகள் வருவதால் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வருகின்றனா். முன்னதாக பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக பெரும்பாலானோா் ஆம்னி பேருந்துகளில் ஊா்களுக்கு செல்கின்றனா். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வழக்கமான கட்டணத்தை விட 2 மற்றும் 3 மடங்கு கூடுதலாக பயணிகளிடம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக, பயணிகள் தரப்பில் புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், மோட்டாா் ஆய்வாளா்கள் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப் படையினா் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் பயணிகளிடம், பயண சீட்டுகளைப் பெற்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பு குறித்து கேட்டறிந்து வருகின்றனா்.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆலோசித்து, அடுத்தடுத்து வரும் தொடர் விடுமுறைகள்போது டிக்கெட் கட்டண உயர்வு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து அதிக கட்டண விவகாரத்தில் 97 பேருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி இயங்கிய 4 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.