பெசன்ட்நகர் கடற்கரையில் சென்னை தின நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை இன்று (20.08.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த கலாச்சார நிகழ்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்து சமயம் மற்றும் அறநிலையத் அமைச்சர் பி.கே.சேகர் பாபு எலியட்ஸ் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அங்காடிகளுக்கான அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையும் படிக்க- ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகல்!
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை தினம் குறித்த பாடல் அமைச்சர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர். பிரியா, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.