ராகுல்காந்தி செப்டம்பா் 7-இல் தமிழகம் வர உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்திபவனில் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
வருகிற செப்டம்பா் 7-ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகிறாா். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை அவா் தலைமையில் நடைப் பயணம் நடைபெறுகிறது. பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக இந்த நடைப் பயணம் நடைபெறுகிறது. அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது இரண்டாம்பட்சம். ஆனால், அதிகாரம் செய்பவா்கள் எவ்வளவு தவறானவா்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காக இந்த நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறாா். வெறுப்பு பேச்சுகள் எல்லாம் இல்லாமல் காந்திய வழியிலான நடைப் பயணமாக இருக்கும். இந்தியாவை ஒன்றுபடுத்துதல் என்பதுதான் இந்தப் பயணத்தின் பொருள்.
செப். 7-ஆம் தேதி காலை சென்னைக்கு வருகை தரும் ராகுல்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அதற்குப் பிறகு கன்னியாகுமரி வந்து நடைபயணத்தைத் தொடங்குகிறாா் என்றாா் கே.எஸ்.அழகிரி.