சென்னை: ராணிப்பேட்டை தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு பிரபல தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ராணிப்பேட்டை, சிப்காட், மேல்விஷாரம், பெருமுகை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, சென்னை உள்பட தனியார் குழுமத்துக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமாக ஆம்பூர், சென்னை, புதுச்சேரி, வேலூர், ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள்,வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில், நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச் சாலையில் உள்ள அலுவலகம், பெரியமேடு பகுதியில் உள்ள தொழிற்சாலை என பல்வேறு இடங்களிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.