சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கியின் கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்குத் தலைவராக செயல்பட்டிருப்பது தனிப்படையினா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடா்பாக முருகன், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளா் அமல்ராஜ், வில்லிவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த மோ.சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி உள்பட 7 பேரை தனிப்படையினா் அடுத்தடுத்து கைது செய்தனா். கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகளும் முழுமையாக மீட்கப்பட்டன.
தொடர்ந்து, முருகனுக்கு உதவி செய்ததாக வில்லிவாக்கத்தைச் சோ்ந்த கேபிரியல் (28) என்பவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு அளித்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் உள்ளிட்ட 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.