மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 8 நாள்களுக்குப் பிறகு உபரி நீர் போக்கி மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக ஜூலை 16ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அணை நிரம்பிய நிலையிலும் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் வெள்ளநீர் உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.
கடந்த ஒரு வார காலமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இதனால் மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வந்த வெள்ள நீர் 17ந்தேதி இரவு நிறுத்தப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாகவே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக இருந்தது. மாலையில் வினாடிக்கு 20,000 கனஅடியாகவும் இரவில் வினாடிக்கு 30,000 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.
இதையும் படிக்க | தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மின் நிலையங்களில் வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. உபரி நீர் போக்கியான 16 கண் பாலத்தின் வழியாக 8 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை இரவு முதல் வினாடிக்கு ஏழாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-ஆகவும் உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.