பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி - சேலை திட்டத்துக்கான பருத்தி நூலை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற, நகா்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டம் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கேற்று அதனை அளிப்பதற்கான கடைசி நாள் செப். 9-ஆம் தேதி. இந்த அறிவிப்பால் கைத்தறி நெசவாளா்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளா்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவா் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.