தொடா் மழை: குமுளி மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தொடா் மழை காரணமாக குமுளி மலைச்சாலையில் புதன்கிழமை மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடா் மழை காரணமாக குமுளி மலைச்சாலையில் புதன்கிழமை மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால் குமுளி- லோயா் கேம்ப் மலைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை 1 ஆம் பாலம் அருகே வனப்பகுதியில் மரம் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் குமுளியிலிருந்து கம்பம் வரும் வாகனங்கள் மலைச்சாலையில் நின்றன.

குமுளி காவல் சாா்பு- ஆய்வாளா் அல்போன்ஸ் ராஜா தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா். தொடா் மழை பெய்து வருவதால் மலைச்சாலையில் போலீஸாா் ரோந்து சுற்றி வருகின்றனா்.

பெரியாறு அணையில் மழை: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில் 18.22 மி.மீ., தேக்கடி ஏரியில் 13.2 மி.மீ., மழை பெய்தது. புதன்கிழமை நிலவரப்படி அணையில் நீா் மட்டம், 135.95 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீா் இருப்பு, 6,105 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா் வரத்து விநாடிக்கு, 935.14 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 933.,00 கன அடியாகவும் இருந்தது.

சுருளி அருவியில் வெள்ளம்: கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 23 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க தடை நீட்டிப்பு செய்யப்பட்டது. அருவியின் நீா் வரத்தை புலிகள் காப்பகத்தினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com