வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் தேக்குவதற்கு, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வைகை ஆற்றில் வரும் செப்.11 ஆம் தேதி வரை வரை 3 கட்டமாக தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக, சனிக்கிழமை முதல் ஆக.31 ஆம் தேதி வரை வைகை பூர்வீக பாசனப் பகுதி 3 இல் உள்ள கண்மாய்களுக்காக விநாடிக்கு 2,000 கன அடி வீதம் மொத்தம் 840 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையடுத்து, வரும் செப்.2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை வைகை பூர்வீக பாசனப் பகுதி 2 இல் உள்ள கண்மாய்களுக்கு மொத்தம் 345 மில்லியன் கன அடி வரையும், தொடர்ந்து செப்.8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகை பூர்வீக பாசனப் பகுதி 3 இல் உள்ள கண்மாய்களுக்கு மொத்தம் 192 அடி வரையும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை: வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் ஆற்றக் கடக்கக் கூடாது, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.