ராமேஸ்வரம்: கச்சத்தீவு நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 465 விசைப்படகுகளில் 2,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலையில் கச்சத்தீவு நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் நிஷாந்த், ஆண்டி ,கருணாநிதி, உலகநாதன், சூசைவியாகுலம், ஜேசு ஆகிய 6 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.