சென்னை: மகளிருக்கான இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு, பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை எழுப்பூரில் நடைபெற்ற அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் அறிவித்த பிறகு, பயணிகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பெண்களின் பயணம் 40 சதவிகிதத்தில் இருந்து 60, 62 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 60 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் கூடுதலாக அமைவதற்கான சூழல்தான் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள இந்த மகளிர் இலவச பேருந்து பயண திட்டமானது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.