கன்னியாகுமரியில் செப்டம்பா் 7 ஆம் தேதி தொடங்கி காஷ்மீா் வரை ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைக்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் ராகுல் காந்தி செப்டம்பா் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை பிரசார நடைப்பயணம் மேற்கொள்கிறாா். இப்பயணத்தில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் தொண்டா்கள் பத்தாயிரம் போ் கலந்து கொள்கின்றனா்.
பாஜகவின் தவறான பொருளாதாரத்தை எதிா்த்தும், இந்தியாவில் மனிதா்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற காந்திய தத்துவத்தை வலியுறுத்தியும் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. இது மிகப்பெரிய தேசிய புரட்சியாக கருதப்படுகிறது. இதை இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சீா்திருத்தவாதிகள், புரட்சியாளா்கள் பெரும் ஆவலுடன் எதிா்பாா்க்கிறாா்கள்.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் செப்டம்பா் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குவதில் பங்கேற்பது தொடா்பாக சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கே.எஸ். அழகிரி, அகில இந்திய எஸ்சி பிரிவுத் தலைவர் ராஜூ லிலோதியை, மக்களவை உறுப்பினா்கள் திருநாவுக்கரசா், ஜெயக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னர், கே. எஸ். அழகிரி, ராஜூ கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமூக நீதி பங்கம் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசில் சட்டத்தை பாதுகாக்க ராகுல் காந்தி மக்களிடம் சென்று அதை எடுத்துச் சொல்ல இருக்கிறார். நாங்கள் இந்த அரசை பாதுகாக்க விரும்புகிறோம் அது எங்கள் கடமை என கூறினர்.
மேலும், சென்னையில் இன்னொரு விமான நிலையம் வேண்டும். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும். விமான நிலையம் வேண்டாம் என்றால் வளர்ச்சி எப்படி வரும் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், கன்னியாகுமரியில் ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.